வண்ணங்கள் கொண்டென்னை
நானே வரைந்துப் பார்த்தேன்
தூரமாய் சென்றெந்தன்
பார்வைகளை நோக்கினேன்
கண்கள் எல்லாம் பல குரோதங்கள்...!!
ஓரமாய் நின்றெந்தன்
உதடுகளை வருடினேன்- என்
விரல்கள் எல்லாம்
பொய்மையின் தழும்புகள்...!!
மௌனமாய் நகர்ந்தெந்தன்
மார்பினில் சாய்ந்தேன்
செவியெல்லாம்
துரோகங்களின் கூக்குரல்கள்..!!
வேகமாய் விலகியெந்தன்
தேகத்தின்
அருகில் நின்றேன்
சுவாசமெல்லாம்
பாவங்களின் வாடைகாற்று..!!
பாவமாய்
குணிந்தெந்தன்
இடையினை
தழுவினேன்
கரங்கள்
இரண்டிலும்
இச்சைகளில் பிசுபிசுப்புகள்..!!
சோகமாய்
அமர்ந்தெந்தன்
பாதங்களை
தாங்கினேன்
உள்ளங்கைகளிலே
இழப்புகளின் சுவடுகள்..!!
வெறுப்போடு
எழுந்து நான்
காரி
உமிழ்ந்தேன்
சித்திரத்தின் மீது-ஆனால்
ஈரமாகிப்போனதென்னவோ
என்
முகம்தான்..!!
ஆமாம்
இதுவரை
அழுக்குகளின்
மீதே நான்
அழகு
பூசி திரிந்திருக்கின்றேன்..!!
சித்திரத்தை
அழித்துவிட்டு
அமைதியாய்
கடந்து போகிறேன்
சுவருக்கு நன்றி சொல்லி..!!
முடிந்தால்
நீங்களே
உங்களை
வரைந்துபாருங்கள்
நீங்கள்
அழகா???
அழுக்கா??? என்று தெரியும்..!!
-பிசாசு-