Wednesday, December 21, 2016

வலிகளின் குத்தகை..!!!

துருபிடித்த இரும்புகளாய்
இற்றுபோனதோயென
உடையும்படி
உயிரற்றுப்போய் கிடக்கும் 
கால்களோடும்


இடியும் மின்னலும்
சேர்ந்து கொழுத்திய தீயாய்
எரிந்துகொண்டிருக்கும் அடிவயிற்றில்
உயிர்கொல்லும் 
வலியொன்றோடும்


கடவுளும் தூரமாயிருக்க
தீண்டாமை நான் என்று சொல்லியிருக்க
ஓரமாய் ஒதுங்கிருக்கியிருக்கிறாள்.!!!


தூரப்பயணங்கள் துன்பமாகின்றது
இன்பம் கொள்வதென்பதே
பெரும் மாயமானது 
இவளுக்கு..!!!


ஒரு நாளைக்கு பல முறை
ரத்த கறைபடிந்த அதை 
மாற்றியாக வேண்டி
உடல் குழித்து உயிர் வெறுத்து
சாவிலும் வாழவும்
வாழ்விலும் சாகவும்
யார் விட்ட சாபம் இவளுக்கு
அந்த மூன்று நாட்களில்..???


ஆண்மையும்
தோற்றுதான் போகவேண்டும்
இவளின் வலிகளுக்கும்
தியாகத்திற்கும்..!!!


அதுமட்டுமா
அடித்து துவைத்து அலசி
யார் கண்ணுக்கும் தெரியாது
காயவைத்தெடுத்த
அழியாதிருக்கும் கறைபடிந்த
துணிகளை அடுக்கி வைத்து
அடுத்த மாதமும் பயன்படுத்த
காத்திருக்கும் பெண்களும்தான்
எவ்வளவோ..???

பெண் என்பவள் 
பேரின்ப பெட்டகம் மட்டுமா..??
வேர் முதல் நுனிவரை
வலிகளின் குத்தகை..!!!
-பிசாசு-

Monday, December 19, 2016

காதல் நீ..!!

உன் அன்பெனக்கு 
எவ்வளவு முக்கியமானது
உணர்ந்தேன் உன் சிறு பிரிவில்....!!

உடல் பிளந்து உயிர் அளந்து
இதயத்தில் நுழைந்தவளே
உனை தாண்டி -என் 
சிந்தனை போகவில்லை..!!!


யார் யாரோ எனக்கென்று
கைகோர்த்து நடக்க 
வலையில் நழுவிய மீனாய்
பாய்ந்தோடி போக 
திசை மாறி நின்றேன்- நீ வந்து 
என் திசை காட்டினாய்
எனையும் மாற்றினாய்..!!!


காதலிக்கின்றோம்
கனவுகளில் தொலைந்து 
போகின்றோம்
மீண்டும் நாம் மடிமாறி 
பிறக்கின்றோம்

சேர்வதாயினும் நாமகவே
பிரிவதாயினும் 
உயிராகவேயென்று
உள்ளத்தில் உயிலெழுதி 
வைக்கின்றோம்..!!!


இணைந்திருக்கும் தருணங்களில்
நீ எனக்கு வெளியே
இருக்கிறாய்...!!
சிறு ஊடலில்
எனக்குள்ளேயே இருந்து
உன் நினைவு தாளத்திற்கு
என்னை ஆட வைக்கிறாய்


நீ அடிக்கடி
மேகத்துள் நிலவாய் 
ஒளிந்துகொண்டு
உனை தேடவும் வைக்கின்றாய்…!!!!
காதலில் ஏனடி இப்படி எனை போட்டு
வதைக்கின்றாய்..????
-பிசாசு-



Saturday, December 17, 2016

நாளை உன் முன்னே..!!!

உயிர் மெய் 
எழுத்துகளை  எடுத்து
உயிரான நீயே என் மெய்யென்று
கிறுக்கி வைக்கின்றேன்
உறவே 
உன் நினைவில் சில
கவிதைகள் தினம் தினம்..!!!

சித்தமதில் 
நீ நுழைய நித்தம் நான்
கனவுக்குள் விழுந்தேன்..!!

பத்திரமாய் உனை நான் பத்தியபடுத்த
மொத்தமாய் நான் 
எழுந்தேன் உன்னவனாக..!!!


கவிஞர்கள் கலைஞர்கள்
எல்லாம் எழுதி வைத்த 
கதைகளில் காணதொரு
இன்பம் கண்டேனடி
புன்னகைத்து சிக்கி திக்கி வரும்- உன்
வார்த்தைகளில்

ஓ… இதுதான் காதல் கிறுக்கா..???


அழகிகள் ஓராயிரம் சொல்ல கேட்டிருக்கின்றேன்
தேவலோக ரதிகளை பற்றியும்
கொஞ்சம் வாசித்திருக்கின்றேன்
தேவதைகளும் பூமிக்கு வந்து போகும்
மாய கதைகளையும் அறிந்திருக்கின்றேன்
எல்லாமே பொய்யாய் போக -நீ
வந்தாயடி தேரழகே 
என் முன்னே மெய்யாய்..!!!



நிலவின் முகம்
கார்மேகம்
வண்ணத்து பூச்சிகளின் ஊர்வலம்
வண்ணசோலையின் வாசனை
இவையெல்லாம் ஒன்றாய் கண்ட இன்பம் 
நீ..!!!

சொல்லடுக்கி சொல்லப்போனால்
சொல்லிக்கொண்டே இருப்பேன்
தொல்லை தரும் வரிகளும் கூட
செல்லமாய் உனை கொஞ்ச சொல்வேன்..!!!



சேமித்த உண்டியல் காசாய்
நினைவுகள் காதலில் நிரம்பியிருக்க -நான்
காதருகே கொண்டுவந்து குலுக்க
கவிதைகளும் உனை காதல் செய்வதாய்
சொல்ல கேட்கின்றேன்..!!
நாளை உன் முன்னே காதலை
உடைக்க போகின்றேன்
சில்லரையாய் சிதறலாம்
உன் இதயவறையை 
நான் வெல்லலாம்

ஆகையால் இன்று இங்கு
முற்று வைக்கிறேன்….!!!
-பிசாசு-

Thursday, December 15, 2016

காதலில்.....!!!!!

அன்றுனை தாமியில் பார்த்தேன்
அடுத்த நொடி எனை மறந்தேன்..!!
இனி என்றுனை பார்ப்பேன் என்றே
ஏங்கியே நான் கிடந்தேன்..!!!

உன் விழி அம்பு என் வழி வந்து தாக்கி
வீழ்ந்து கிடக்கும் என் இதயம்
துடிப்பதை மறுக்குமா.???
உனை நினைப்பதைதான் நிறுத்துமா..???

வானத்து நிலவாய் நீ சிரித்தும்
சோறுண்ணும் சிறு பிள்ளையாய் 
நானிங்கிருந்தும்
குறுகிட முடியா இடைவெளியிது
சேர்ந்திட முடியா தூரமது… புரிந்தும்..
தீயை தொடும் மழலையாய்- உனை
நான் தீண்டினேன்..!!!



இடைவெளி பனியென உருக
மனமது இருப்பிடம் மாற
இணைந்தது புது காதல்..!!!

நிமிடங்கள் ஒவ்வொன்றும் 
கற்பனையில் குளிக்க
தெப்பமாய் நனைந்து நாட்கள்..!!!

சந்திக்கவே தூண்டி எனை தினம் நிந்தித்தது
உனை தீண்டி என்னுடல் தாண்டும் காற்றும்..!!


பனி மலையும் மீன் பாடும் தேனாடும்
ஒன்றோடொன்று கலக்க
புது உலகொன்று பிறந்தது- காதல் இதுதான்
என்றது..!!!


உடல்தாண்டி உளம் சேர்ந்த காதல்
உயிரோடி மோட்சம் காணுமோ..???
யாரறிவார்..??

சுற்றி நின்று தீ மூட்டும்
உயர்வு தாழ்வுகளுக்கு நடுவில்
உருகி உருகி காதலிக்கும் நம் இதயங்கள்
இணையுமா இல்லை பிரியுமா
தெரியாது தவித்திருக்கு இன்னும்
அதிகமாய் காதலிக்கிறது காதல் நம்மை..!!!

நிலவாய் இருக்கும் நீ
வசிக்க வருவாயா என்னில்??
சிறு பிள்ளையாய் நான் வசிக்கவாரவா 
நிலவில்..???
முடிவில்லா தூரமாயுமில்லை
இது பிரிந்திடும் நூலாயுமில்லை
காதல் இனி என்றும் அழிவதாயுமில்லை..!!!
-பிசாசு-

Thursday, December 8, 2016

நீ எனை மாற்றினாய் நீயாக..!!

மலர் மாலை
பூ மழை
வெண்பனிக் கூட்டம்
சேர்ந்து நடந்து வந்ததாய்
உன் தோற்றம்..!!!

கடலலை
கரை நுரை
கிழிஞ்சல்களின் கூட்டம்
கூடி நின்றதாய்
உன் ஏற்ற இறக்கம்..!!!

நீண்ட வானம்
முழு நிலவு
நட்ச்சதிரங்களின் கூட்டம்
ஒட்டிக்கொண்டதாய்
உன் வதனம்..!!!


மலை முகடு
மாலை நேர சூரியன்
மறைந்து கொள்ளும் காட்சியாய்
உன் மாரழகு..!!


மழலை புன்னகை
மந்திர வார்த்தைகள்
கூட்டு ஒப்பந்தம் செய்யததாய்
உன் பேச்சு..!!!


நடைபழகும் குழந்தையாய் -நான்
இடையழகு கொண்ட குமரியாய் -நீ
இடை பிடித்து 

இடம் எடுத்து 
தடம் பதிப்பதாய் -காதல்..!!!
-பிசாசு-

Saturday, December 3, 2016

ஏ9..!!!

உலக தமிழர்களின் அடையாளப்பாதை
புத்தனில் தொடங்கி  கந்தனில் முடியும் பாதை

அடிக்கடி மூடுபாதையில்
வராலாறு படைத்திருக்கின்றது
திண்பண்டங்களும் சிறு தேங்காயும்
வாகன விலைக்கு விற்றுபோயிருக்கின்றது


செந்நாட்டு அரசன்போல் பாதுகாப்பில்
நீண்டு வலைந்துகிடக்கின்றது.
அன்று யுத்தத்தின் இரத்தத்தில்….
இன்று நாளுக்கு இரண்டாய்
வீதி விபத்தின் கோரத்தில்…
என்றும் அடிக்கடி இரத்த வெள்ளத்தில்
குளித்துக்கிடக்கின்றது..!!!




ஊடகங்களில் வாயிலும்
வெளிநாட்டுக் காரன் கண்ணிலும் அடிக்கடி
போதையேற்றிய பாதை
வீர மங்கைகள் எம்பெண்கள் உலாவி திரிந்த
பெருமைகொண்ட பாதை..!!!


யுத்தத்தின் பிடியில் பெயர் பெற்று
செம்மண் புழுதி காற்றில் கலந்து
வானளவு உயர்ந்த பாதை..
வானவூர்திகளும் வாகனத்துள் ஒழிந்து
பயணித்த பாதை..!!!


வரலாற்று கதைகளெல்லாம்
கடந்து வரும்- மதம்கொண்டு மனம் கெட்ட
மனிதரின் மனதையும் சொல்லிவரும்
இந்த பாதை…!!!!




செல்களின் செதுக்கள்களில்
அன்று ஆயிரமாயிரம் உருக்கள் பெற்றது
வடக்கின் வசந்தத்தில்
இன்று செப்பணிட்டு சிரித்து
உள்ளே விம்மலுடன் விசும்புகினறது..!!!


காவலரண்களுக்கு இங்கு பஞ்சமில்லை
ஓமந்தை முதல்
துரையப்பா மைதானம் வரை..!!!
மனித ஓலங்கள் குறையவில்லை
தமிழர் மேளம் முழங்கிடும் வரை..!!!


தமிழ்ச்சுவை கொண்ட 
விருந்தகங்களுக்கு பஞ்சமில்லை
சிங்கள மொழியும் 
தங்கசிலை புத்தனையும்
தம்புள்ளையில் தரிசிக்க 
முடியாது போவதுமில்லை..!!!


வீதியோர விளக்குகள்
கிளிநொச்சியில் ஜொலிக்கிறது
ஏ9 தாண்டி உள்ளே சென்றால்
கோவில்களும் செல்லடியில்
ஊனமாய் கிடக்கினறது..!!!


உடைந்த நீர்தாங்கி
அடையாளமாகி போனது
தெய்வங்களும் அவமானத்தில்
தூக்கிட்டுக்கொண்டது..???



இலங்கையின் கழுத்தின் அசலக்க வீரனின்
சிலை உயர்ந்து நிற்கின்றது
தமிழுக்காய் தன்னுயிர் தியாகித்த
வீரர்களின் உருவங்கள் எல்லாம்
மண்ணோடு மண்ணாய் 
புதைக்கப்பட்டுவிட்டது..!!!



முள்ளிவாய்கால் போய்வந்த வைரமும்
இதன் வழியே பயணிக்கவில்லையா..???
இவர் வரிகளில் இதையெழுத
மறந்து போனதும் தெரியவில்லையா..???



மாண்டு மடிந்த வரலாறுகளும்
மறந்துபோகுமா..??
மீண்டு எழுந்து நின்று
புது காவியம் எழுத அது மறைந்துபோகுமா..???
தீது செய்த மாற்றான் வாழ்வு செழிக்குமா..??
முள்வேளிக்குள்
முடங்கிக்கிடந்த தமிழர்தம் வாழ்வு
முடிந்து போகுமா..???


இது வெறும் பாதையல்ல
வலிகளின் வரிகளையும்
துரோக விதிகளின் வெறுப்புக்களையும்
சுமந்துக்கொண்டு கிடக்கும்
உலக தமிழர்களின் அடையாளப்பாதை…!!!

-பிசாசு- தமிழன்



நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...