Thursday, September 29, 2016

காதலுக்கு முன்..!!!

இரவை எதிர்பார்த்ததுமில்லை
கனவுகளை தேடியதுமில்லை..!!!
கடலை நேசித்தது இல்லை
கரைகளைத் தொட்டதும் இல்லை..!!!
காதலுக்கு முன்..!!!


நிலவை பிடித்தமில்லை
ஒளியினில் விழுந்ததுமில்லை..!!!
பூக்களை நுகர்ந்ததில்லை
வாசத்தை சுவாசித்ததில்லை..!!!
காதலுக்கு முன்..!!!


கற்பனையை தூண்டியதுமில்லை
கவிதைகளை கிறுக்கியதுமில்லை
தனிமையில் சிரித்ததுமில்லை
வெறுமையாய் நின்றதுமில்லை
காதலுக்கு முன்..!!!


காதலை சுமந்ததுமில்லை
தெருவெங்கும் ஏதோ ஒன்யை 
தேடித் திரிந்ததுமில்லை..!!!
கண்ணீரில் கரைந்ததுமில்லை
இப்படி பைத்தியமாய் அலைந்ததுமில்லை
பட்டினிக்கிடந்துமில்லை
காதலுக்கு முன்..!!!



காதலுக்கு முன் காதலையும் -நான் 
காதலித்ததுமில்லை
இப்படி நான் நீயானதுமில்லை
நான் யாரென்று
உணர்ந்திடவுமில்லை 
“காதலுக்கு முன்”
-பிசாசு-

பிடிக்காத வரனும்....

ஜாதி மாறி காதலித்தால்
தரம்கெட்டு போய்விடும் என்று
அவசர அவசரமாய்- என் மனம்மாத்தி
கட்டிவைத்தனர்
மனம் ஏற்காத ஒரு பெண்ணை..!!!


திருமண புகைபடத் தொகுப்பில்
கூட புன்னகைக்கவில்லையென்று
ஒரு மாதம் கழித்து
ஒப்பாரி வைக்கின்றாள் அவள்…!!!

கண்கள் கூட அவளை பார்க்கவில்லை
இன்னமும் வார்த்தைகள் கூட
அவளை கொஞ்சியதில்லை என் சொந்தமென்று..!!!
மறந்து போகாமலும்
இறந்து போகாமலும் என் காதலி
என்னுள் உயிரோடிருக்க எப்படி நான்
இவளுக்கென்றோர் ஓர் உயிரைக் கொடுப்பேன்..???



தொட்டுவிட விரும்பவில்லை
அவள் கன்னத்தில்
முத்தங்களை வைத்துவிட முடியவில்லை
என் தேடல்களும் கூடல்களும்
அவளோடு போயிருக்க- இல்லாத ஒன்றை
இவளுக்கெப்படி பரிசளிப்பேன்..!!!!



இதயம் கனக்கிறது
இமைகள் துடிக்கிறது
இல்லாத காதலை இவளுக்கெப்படி 
கொடுப்பதென்று..???

பிடிக்காத வரன் ஒன்றை
பிடித்த என் காதலு(லி)க்காக
ஏற்றுக்கொண்டேன்
என் வாழ்வில் சேர்த்துக்கொண்டேன்..!!!



காலம் கடந்து போக….
என் வீட்டு கௌரவமும்
எங்கள் வீட்டு ஜாதியும் வென்றதாய் 
சொன்னார்கள்
அவர்களுக்கு மட்டுமல்ல
இவளுக்கும் கூட தெரியவில்லை
ஜெயித்தது காதலென்று- எனக்காய் வந்த
இவள் தந்த புது காதலென்று..!!!



பிடிக்காத வரனும்
பிடித்துப்போனது இவள் காட்டும்
புது அன்பில் இன்று..!!!!


பிரிந்தவள் பிரிந்ததாய்
இருக்கட்டும் இனி என்னோடு
இணைந்தவள் என்றும் பிரியாது
இருக்கட்டும்..!!!!
--பிசாசு--

Sunday, September 25, 2016

ஒரு நாள்..!!!

என் அன்பே உன்னருகிள் நான் 
வாழ்ந்திட வேண்டுமடி

உன் விரல் நடுவில்
சிக்கிக்கொண்டு ஒரு நாள்..!!!
உன் விழி பார்வையில்
இமைக்கொண்டு ஒரு நாள்..!!!

உன் இதழ்களின்
முத்தத்தில் ஒரு நாள்..!!
உன் புன்னகையின்
சத்தத்தில் ஒரு நாள்..!!!

உன் காற்றின்
சுவாசத்தில் ஒரு நாள்..!!!
உன் மூச்சின்
வேகத்தில் ஒரு நாள்.!!!


உன் இதயத்தின்
துடிப்பினில் ஒரு நாள்..!!!
உன் வெட்கத்தின்
நடிப்பில் ஒரு நாள்..!!!


உயிரான உன்
காதலில் ஒரு நாள்
ஆறுதலான மடியில் 
ஒரு நாள்..!!!
அன்பான அனைப்பில் 
மற்றொரு நாள்..!!!


ஒவ்வொரு நாளாய் ஒரு நூரண்டு
உன்னோடு நான் வாழ
என்னோடு நீ சேர
நம் காதலோடு வாழ்ந்து
கல்லரையிலும் உன்னோடு
வாழ வேண்டும் ஒரு நாள்..!!!
-பிசாசு-




வலிகளில் வாழ்ந்தவள்..!!!

அடியே கருப்பாயி  யென்றே
அந்த வாசட்படியேறும் போதே
அப்பாவின் காரக்குரலில்

அம்மாவின் அடுத்த
துக்கமும் யுதமும்
தொடங்கிவிடும்
என்னப்பனோடு..!!!

கள்ளும் சாராயமும்  ஊறிப்போன
நாக்கிற்கு அம்மாவின் சமையலின்
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாதுபோகும்
செத்துப்போன அன்புக்கும்..!!!

எப்படிச் செய்தாலும்
என்னதான் செய்தாலும்
ருசியில்லையென்று
காரணத்தோடு அடித்து
சோற்றுக்கோப்பையையும்
லயத்து கானில் வீசியெறியும் அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும் அடிக்கத் தொடங்கிவிட்டார்
கழுத்தைபிடித்து  வெளியிலும் தள்ளிவிடுகின்றார்..!!!

பல நாட்களை பட்டினியாலே
கழித்திருக்கின்றாள்
வெற்றிலை மட்டுமே அவள்
பசிபோக்குவதாய்
நினைத்திருக்கின்றாள்- நானறிவேன்
என்னிரவுகளில் காற்சட்டை
நனைந்ததை விட -அவள்  கண்ணீரில்
நனைந்ததே அதிகம் என்பதை
நானறிவேன்..!!!


விறகெடுத்து அடுப்பு மூட்டி
ஊதி ஊதி சாம்பளையும்
கரியையும் பூசிக்கொண்டு சமைத்த- என்
தேவதையின்
அழகும்
அன்பும் 
அவளருமையும்-என்
குடிகார அப்பனுக்கு
தெரியவில்லை..!!!


பக்கத்து வீட்டு
பையன்கள் எல்லாம்
புது ஆடையோடு
பூரித்திருக்க அழுக்காடையில்
எனைப் பார்த்து அழுதழுதே
ஏக்கம் கொண்டவள்- தான் வைத்திருந்த
ஒரு தாலிமணியையும்
தாரைவார்த்துக்கொடுத்து
வாங்க சொன்னவள்
என்னழகை ரசிக்க..!!!

அதிலும் அரைவாசி குடிக்குப்போக
சந்தையில் விற்ற சட்டையை
கடையில் வாங்கியதாய் வாய் கூசாது
பொய் சொல்லி கொடுத்தவன்
என் அப்பன்..!!!


குடும்பத்தை மட்டுமே
உலகமாய் எண்ணியவளுக்கு
இது அன்று தெரியவில்லை..!!!


வீட்டிலும் நொந்து போனவள்
தேயிலை மலையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
வெந்துபோனாள்..!!!

பத்தாம் தேதி வந்தாள்
புன்னகையில் பூப்பாள் பிள்ளைக்கு
கறிசோறு போடலாமென்று..!!!

வேர்வை சிந்தி வாங்கிய சம்பளத்தில்
ஒரு தொகையை
கட்டமொய்யாய் மாதமொரு முறை
கொடுப்பாள்
சந்தா பணமென்றுசாக்கடை
நாய்களுக்கு..!!!

உரிமைகள் பற்றி தெரியாதவளாய்
வாழ்ந்துவிட்டாள்
உறவுகளை பற்றி
உணர்ந்தவள்- அன்பான
உறவுகளின்றியே
வாழ்ந்துவிட்டாள்..!!!

இவள் கொண்ட
பொறுமையெல்லாம்
குடும்பத்தின் பெருமை காக்க
அவள் பிள்ளை வாழ்வை
வளமாக்க என்பதை
நான் உணரும் வயதில் அன்றில்லை
இன்று நான் உணரும்போது
அவள் உயிரோடில்லை..!!!

அன்பை தேடித் தேடியே
தேய்ந்து போனவள்..!!!
வெற்றிலை சப்பி சப்பியே
சாபத்தை வாங்கிக்கொண்டாள்
புற்று நோயாய்

தாயில்லா வலியை நான்
உணரும் முன்பே
மனைவியில்லா
வலியை உணர்ந்துவிட்டான்- என்
குடிகார அப்பன்  குடியினால் வந்த நோயால்
கவனிக்க யாருமின்றி..!!!

ஏன் பிறந்தாள் அவள்
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில் இவள் என்னப்பனுக்கு
வாக்கப்பட்டு..???
ஒருசான் மஞ்சள் கயிறால்
வென்றானா என் அப்பன்..???

அன்று தோற்றுப்போனவளும்
பிள்ளைக்காகவே தோல்வியை
ஏற்றுக்கொண்டவளும்

என் அம்மா..!!!
-பிசாசு-

Thursday, September 22, 2016

தினமும் மரணிக்கின்றேன்

அன்பாக எனை அழைத்து
உன் ஆசை தீர காதல் மொழி பேசி
வஞ்சமில்லா உன் நெஞ்சமதில்
பஞ்சமில்லா காதலொன்றை
தந்தாயே -என்
செல்லமே..!!!

கோபங்கள் நான் கொள்ளும்
போதெல்லாம் சிறு புன்னகையிலே
சாந்தப்படுத்தி துரோகிகளையும் கூட
நேசிக்க கற்றுக்கொடுத்தாயே -என்
தங்கமே..!!!

தோல்விகளின் போதும் கூட
ஆறுதல் தந்து வெற்றியின் பக்கங்களில்
என் பெயரெழுதிட முதலெழுத்திட்டு
தூரமாய் நின்று பார்த்து ரசித்தாயே
என் சொந்தமே..!!!

இப்படியெல்லாம் என்னோடு இருந்தவள் நீ
என்னை முழுவதுமாய் உன்னிடம்
இழந்தவன் நான்..!!!

என்னுயிர் கூட என் சொந்தமில்லாது
உன்னோடு வந்து உறவாட
தினமும் மரணிக்கின்றேன் நான்
என் கவிதையில்..!!!
மறுபடியும் புதிதாய் பிறக்கின்றேன்
உன் மடியில்..!!!!
-பிசாசு-

Tuesday, September 20, 2016

அழகு

மூடாத உன்னழகு
எது என்றால்
அது உன்
முகம் என்பேன்..!!!
மூடிய உன் அழகு 
எது என்றால்
அது உன்
மனம் என்பேன்..!!!
மொத்தத்தில் உன்னை 
காதலிப்பதில் நான்
பித்தன் என்பேன்..!!!

-பிசாசு-

என் கவிதைகளும் நீதான்

தொடங்குமிடமறியாமல்
முடிக்குமிடம் ஏதும் புரியாமல் நான்
தடுமாறி தலைசொரியும் நேரமெல்லாம்
தடம் மாறிடாது கனகச்சிதமாய் ஆரம்பித்து
காதல் கவிதைகளுக்கு
பிள்ளையார் சுழிப்போட்டு
தலைக்கோதிவிடுகிறதடி
உன் கண்கள்..!!!

தனிமையில் நான்
உருகிய போது உயிராய் உடன் வந்து
தாயாய் தலைக்கோதி
நீ தந்த  அன்பின் ஆதாரம்கொண்டு
கவிதையாய் வாழ்ந்திடச் செய்கின்றதடி
உன் காதல்..!!!

நீயும் நானும் தனிமையின்
இடைவெளியின் பூட்டுடைத்து புதுக்கவிதை
படித்த நிமிடங்களை
வள்ளுவனின் மூன்றாம்பாலில்
கொஞ்சம் தொட்டெடுத்து
காதலை தாண்டி மோகக்
கவிதைகள் கிறுக்கச்செய்கிறதடி
மூடாத உன் அழகு..!!!

வெறும்தாளாய் படப்படத்த என்னில்
பலநூறு வண்ணம்கொண்டு 
தீட்டியவளும் நீதான்..!!!
இன்று நான் மைத்தொட்டு உயிர்கொண்டு
எழுதிடும் 
“என் கவிதைகளும் நீதான்”
-பிசாசு-









Monday, September 19, 2016

முதல் பிரசவம்..!!!

மீசை முளைக்காத வயதில்
காதலாசை முளைத்து- கல்லூரி சாலையெங்கும்
அவள் முகம் தேடி
ஒடிய சுகம் காதலின் முதல் பிரசவம்..!!!

வார்த்தைகளை கலைத்துப்போட்டு
எழுததெரியாமல் நான் கிறுக்கிய
ஒரு தலாட்டு காதல் பாட்டு
கவிதையின் முதல் பிரசவம்..!!!

தனியாகி பிறந்தவளின்று 
துணையாக வந்தவனோடு
மணவாழ்க்கைக் கொண்டு
பெண்ணிலிருந்து தாய்மையாக
பெண்மையின் முதல் பிரசவம்..!!!

துணையாக இருந்தவளோடு
உயிராக கலந்தவனின்று இரு ஜீவன்களோடு
உறவாடும் புது சந்தோஷம்
வாழ்ககையின் முதல் பிரசவம்..!!!


காரணமே இல்லாமல் அம்மாவை அழைத்து
காரணத்தோடு விம்மி விம்மி
அழும் குழந்தையின் தேடல்
வம்சத்தின் முதல் பிரசவம்..!!!

 -பிசாசு-

Sunday, September 18, 2016

புது காதல் கதை

அடிக்கடி மௌனங்களின்
கணங்களைக்கொண்டு
உறைய வைக்கின்றாய்
என் இதயத்தை..!!!


மறுநொடியே
வெள்ளிப்புன்னகை வீசி
நிறைய வைக்கின்றாய்
அதே இதயத்தை..!!!


அடிக்கடி கோபங்களின்
கீற்றுக்களை வழியனுப்பி
உரசிப் புண்ணாக்குகின்றாய்
என்னுயிரை..!!!


சிறு இடைவெளியில்
ஓடி வந்து அரவனைத்து
உயிரையும் கூட
கரைய வைக்கின்றாய்..!!!


சிறு நாடகம்
அரங்கேற்றி வெறுமேடையாக்கினாய்
புது காதல் கதையெழுதி
பைத்தியமாக்கினாய்..!!


சகியே..!!!


பேச்சில்லை நீ
மெளனமாய் நின்ற போது
மூச்சில்லை நீ
பிரிந்து போகும் போது


இன்று
நானேயில்லை நீ
எனக்காய் இல்லாத போது..!!!
-பிசாசு-



வேசமான பாசமும்.......!!!

எனக்குள் பெரும் போராட்டம் 
பகுத்தறிய முடியவில்லை 
ஒவ்வொரு முறையும் 
பாசத்தில் தோற்கும் போதும்..... 

சூழ்நிலை கைதியாகி 
எனை வெறுக்க ஒன்றுமில்லை 
என்ற சொல்லில் 
ஓர் இலட்சம் உண்மைகள் மறைய 
பாசம் மட்டும் வேசமாக..... 

என் மன புழுக்கம் ஆற்ற 
வீசிய தென்றலும் 
தோற்று இயலாமையுடன் 
அசைவற்று போக 
என் வேதனை போல் சுழன்றடித்து 
கலைந்து போனது 
வேசமான பாசமும்.......!!!

- சிறிமதி-

Friday, September 16, 2016

பௌர்ணமி இரவில்
கடற்கரை மணலில் -உன்
கால்தடம் தேடித் தேடி என்
கண்களோடு
காதலும் கடலலையாய்
அலைமோதி திரியுதடி
பெண்ணே..!!!


நீ வந்துப்போன வாசம் மட்டும்
என் சுவாத்தில் கலந்து
உன்னறிமுகம் சொல்ல
மூடிய கண்கள் ஒரு நிமிடம்
உன்னை நினைக்க
நுரையீரல் வரை உன்
வாசத்தை ஆழ்ந்து சுவாசிக்கின்றதடி
காதலும் இதயத்தின் மோதலும்..!!!

ஒரு ஓரமாய் உன் பாதச்சுவடு
தடம் பதித்துப்போக
சந்தோஷத்தில்
மண்லெல்லாம் அள்ளி அள்ளி
நெஞ்சோடு பூசிக்கொண்டு
பித்தனாகி தேடுதடி உன் முகம்தனை
என் காதல்..!!!

ஒளிந்து விளையாடியது போதுமடி
ஓரங்க நாடகம் அரங்கேற்றி
என்னை ஒதிக்கி வைத்ததும் போதுடி
என் உறவே
காதலின் பௌர்ணமி நிலவே
பால் முகம் காட்டிவிடு
என் காதலுக்கு தாகம் தீர்த்துவிடு..!!!
-பிசாசு-

Wednesday, September 14, 2016

தனிமை

உன் பார்வைகள்
உன் புன்னகைகள்
உன் வார்த்தைகள்
உன் தவிப்புகள்
உன் கெஞ்சல்கள்
கொஞ்சம்
கொஞ்சல்கள்
நீ வந்து போன நாட்கள்
இவை அத்தனையையும்
ரசிக்கிறேன்..!!!


நீ இல்லாத தனிமையை
மட்டும் வெறுக்கின்றேன்..!!!
-பிசாசு-

நீ வந்த பின்பு

எந்த இசையும்
பிடிக்கவில்லை -உன் குரல்
கேட்டப் பின்பும்..!!!

எந்த சுவையும்
பிடிக்கவில்லை -உன் இதழ்
சுவைத்தப் பின்பும்..!!!

எந்த பெயரும்
பிடிக்கவில்லை -உன் பெயர்
உச்சரித்தப் பின்பும்..!!!

எந்த பெண்ணையும்
பிடிக்கவில்லை -உன் முகம்
பார்த்தப் பின்பும்..!!!

எந்த இரவுகளும்
பிடிக்கவில்லை - உன்னோடு
கனவுகளில் வாழ்ந்தப் பின்பு..!!!

காதலும் கூட பிடிக்கவில்லை
கைவிட்டு நீ போன பின்பும்..!!!
-பிசாசு-

Tuesday, September 13, 2016

எழுந்து வா தமிழா

வந்தாரை வாழவைத்தே
தன் வாழ்வையிழந்தானே தமிழன்..!!!

வீதியில் கிடந்தவரை
வீட்டுக்கழைத்து அவ்வீடையிழந்து
தெருவில் வீசப்பட்டானே தமிழன்..!!!

பசியில் மயங்கிக்கிடந்தவனை
எழசெய்து விருந்தளித்து
குடிக்க இன்று ஒரு சொட்டு தண்ணீர்
கூடயில்லாது தவிக்கின்றானே தமிழன்..!!

கலாச்சாரமே இல்லாது கிடந்த
கயவரெல்லாம் இன்று தமிழின் நிழலில்
இளைப்பாரி புது காவியம் எழுதிக்கொண்டு
தமிழில் கலப்படம் செய்கின்றனர்..!!!

தனகென்று அடையாளமில்லாது
வந்தவனெல்லாம் இன்று தமிழின்
அற்புதங்களை திருடி வாழ்கின்றான்
அவனாட்சி செய்து..!!!

மொழியை மாற்றினாய்
மௌனமானோம்..!!!
கலாச்சாரத்தை களவாடினாய்
பொருத்துக்கொண்டோம்..!!!
தெய்வங்களையும் கூட
விட்டு வைக்கவில்லை
உருவத்தில் மாற்றம் செய்து
வழிபட்டாய்
விட்டுக்கொடுத்தோம்..!!!
திரவியம் தேடி வந்த நீ
எம் தேசத்தை உன் தேசமாய் திரிபுபடித்தி
புதியதொரு வரலாறு படைத்தாய்
அதையும் வாசித்தோம்..!!!

அகிலத்தையே
அடக்கி ஆண்ட பரம்பரை
நாங்கள் தன்மானம் காக்க
உயிரையும்
துச்சென வாழ்பவர் நாங்கள்..!!!

அங்கும் இங்கும்
எங்குமென சிதறிக்கிடக்கும்
தீப்பொறிகள் தழிழர்கள்
ஒன்று சேர்ந்தால்
அகிலமே சாம்பலாய் போகும்..!!!

போதுமடா என் தமிழா
இனியும் வேண்டாம்
"வந்தாரை வாழ வைத்தது"


நாம் வாழ்வோம்- நமக்காக வாழ்வோம்
நம்மினம்
நம் மொழி
நம் சொத்து
இதை எவனுக்கும்
இனி தாரைவார்த்தலாகாது..!!!

தகர்தெறிவோம் தடைகளை
மீண்டும் ஆழ்வோம் அகிலத்தை

தமிழனை வீழ்த்த இனி எவனும்
நினைத்து முடிக்கும் முன்பே நாம்
அவன் தலைகொய்து
எம் தலைக்காப்போம்..!!!
தமிழைக்காப்போம்..!!!

எழுந்து வா தமிழா
தமிழ் மானம் காத்திட..!!! 
-தமிழன் விந்தும் ஒரு நாள் அதர்மத்தை மிஞ்சும்-






Wednesday, September 7, 2016

நீ தான்...!!!

என் இரவோடு நான் காணும்
கனவுகளும்
நீ தான்...!!!
என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சி நீ தான்..!!!

என் வார்த்தைகளில் பிறக்கின்ற 
வலிமையும் நீ தான்..!!!
என் மௌனத்தில் உருவான 
அமைதியும் நீ தான்..!!!
என் மொழிகளில் வாழ்கின்ற 
தொன்மையும் நீதான்..!!!

என் வழியில் பூக்கின்ற 
பூக்களும் நீ தான்..!!!
என் வாழ்வில் வந்த 
வசந்தமும் நீ தான்..!!!

விரல் பிடித்து நடந்த 
குழந்தையும் நீ தான்..!!!
அடம்பிடித்து இதயத்தில் 
இடம்பிடித்த 
இம்சையும் நீ தான்..!!
என் நெஞ்சில் ஒரு கணம் 
அக்கினியாய்
சுட்டவளும்
நீ தான்..!!!
மறுகணமே பக்கதில் வந்து 
முத்தமிட்டவளும் நீ தான்…!!!

காதல் காட்டியவளும் நீ தான்
என்னில் காயங்கள் கூட்டியவளும் நீ தான்..!!!

உன்னோடு வாழும் என்
உடலும் நீதான்..!!!
மண்ணோடு மண்ணாகிப்போனாலும்
 என்னோடு வாழும்
உயிரும் நீதான்..!!!

நான் என்றும்
நீ தான் 
நீயென்றும் நான்தான்
இறுதிவரை என்றும் நாம் தான்..!!!
-பிசாசு-



Monday, September 5, 2016

வலிகளின் வரிகள்

என்னால் உன்னை 
அழவைக்கவும் 
சிரிக்க வைக்கவும் 
மட்டும்தான் முடியும் 

ஆனால் 
உன்னால் 
என்னை சாகடிக்கவும் முடிகிறது 
பிரிவு என்னும் வார்த்தையால்..!!!
************************************

விலகி பார்க்கின்றேன் 
உன்னைவிட்டு விலக்கி பார்க்கின்றேன்
மறந்து பார்க்கின்றேன் 
உன் காதலை மறக்கவும் பார்க்கின்றேன்
பிரிந்து நிற்க்கின்றேன் 
உன்னை விட்டு பறந்துப்போகின்றேன் 
எல்லாம் உடலால் நடக்கிறது 
என்னுயிர் உன்னையே நினைக்கின்றது
உடலோடு வாழ் விரும்பவில்லை 
பெண்னே.. 
உயிரோடு சாகின்றேன்..!!!
******************************************

விலகிச்செல்லும் உன்னை விட்டு 
விலகி செல்லதான் நினைக்கிறேன்...
ஆனால் 
உன் நினைவலைகள் 
மீண்டும் உன்னிடமே கரை சேர்கிறது
கரை சேர்ந்த நான் மீண்டும் 
கடலுக்கும் இழுக்கப்படுகின்றேன்..!!
*****************************************

போதை தலைக்கேறியும்
உன் நினைவுகளை மட்டும் 
தாண்டிச்செல்ல முடியவில்லையடி
மெய் மறக்கச்செய்யும் 
போதையும் கூட பொய்யானது
உன் நினைவுகளுக்கு முன்னால்..!!!
*****************************************

மதங்களும் ஜாதிகளும்
சாட்டையடிக்கப்பட்டு 
சாக்கடையில் வீசியிருந்தால்
பல காதல் 
கண்ணீரில் கரைக்கப்பட்டும்
கல்லரையில் புதைக்கப்பட்டும்
இருந்திருக்காது..!!!
******************************************

வலிகளினால்
வருகின்ற
வரிகளுக்கு
வலிமை அதிகம் 

காதலால் கொண்ட
காயங்களுக்கு
வேதனை அதிகம்..!!
-பிசாசு-
****************************************


Saturday, September 3, 2016

அவளின் நினைவில் இவன் (சில கிறுக்கள்கள்)

உன்னருகில் இருந்த 
என் நிமிடங்கள் 
உணர்த்திடாத

காதல்  இன்பங்களையும் 
உன்  நினைவுகளோடு
உறவாடும் போது
உணர்த்துகின்றது 
-காதல் கனவு-
*********************


கோடி ஆண்டுகள் 
கடந்துவந்து-நீ விட்டுச்சென்ற
பிரிவெனும் தண்டவாளங்கள்
என்னோடு
ஜென்ம ஜென்மங்களாய் 
நீண்டாலும் - என் 
கல்லறையில் புற்கள்தான்
முளைத்தாலும் 
நான் காத்திருப்பதும்
உன்னையே 
சார்ந்திருப்பதும் 
ஒரே காரணம்தானடி
நான் உன்னை காதலிக்கிறேன் 
**********************************

இமைகளை
திறந்து இதயம் 
எட்டிப்பார்க்கின்றது
நீ எதிரில் என்னை கடக்கும் போது..!!

இதயத்தை 
மூடி கண்கள்
ஒட்டுக்கேட்கின்றது
நீ தூரமாய் பேசிடும் போது..!!

இரவுகளை
கடந்து கனவுகள்
வந்துபோகின்றது
நீ என்னை பார்த்திடும்போது...!!

மொழிகளை 
மறந்து கவிதைகளும்
கூட மௌனமாகின்றது
நீ என்னை 
திட்டித்தீர்த்திடும் போது..!!

மரணத்தையும் 
மிதித்து காதலும்
கர்வம் கொள்கின்றது 
நீ என்னை உரசிடும்போது..!!
******************************

உனக்கும் சேர்த்தே
என்னை நான் 
காதலிக்கின்றேன்..!!

உனக்கும் சேர்த்தே
கவிதைகள் நான் 
எழுதுகின்றேன்..!!

உனக்கும் சேர்த்தே 
கனவுகளை நான் 
கடன் வாங்குகின்றேன்..!!

உனக்கும் சேர்த்தே
சுவாசத்தை
யாசிக்கின்றேன்..!!

உனக்கும் சேர்த்தே
கற்பனைகளை நான்
சேமிக்கின்றேன்..!!

உனக்கும் சேர்த்தே
கண்ணீரில் நான்
கரைகின்றேன்..!!

உனக்கும் சேர்த்தே
ஏழு ஜென்மங்களை
பெற்று வந்தேன்..!!

சகியே...
அந்த ஜென்மங்களில்
ஒன்றிலாவது நீ
எனக்கும் சேர்த்து 
என்னை காதலிப்பாயா..???
என்னை சார்ந்தே வாழ்ந்திருப்பாயா..???

-பிசாசு-
******************************************







Friday, September 2, 2016

ஏழைத்தாய்

ஐயிரண்டு மாதங்கள் மடிதாங்கி... 
அல்லும் பகலும் கண் விழித்து.... 
சிணுங்கும் குரல் கேட்கும் முன்னே... 
முலையூட்டி உன் பசி தீர்த்தவள் !!!! 

எடுத்தடி வைக்க தள்ளாடிய 
உன்னை இன்று.... 
ஏணியாக இருந்து 
புகழின் உச்சியை தொட வைத்தவள்!!!

தனியாக 
தவிக்கின்றாள் உன் குரல் கேட்க ... 

சீமையில் 
சீமானாக இருக்கிறேன்!!! 
சேர்ந்து வாழ்வோம் வா என்றாய்... 

பாசமென பறந்து வந்தேன்!!! 
பாசமல்ல, 
மோசமென ஏங்குகிறாள்!!! 
ஒரே வீட்டில் இருந்தும் .... 
ஓடி ஓடி உழைக்கும் 
மகனுக்கும் மனைவிக்கும்... 
புரியா பாசையில் பேசும் ... 
பேரக்குழந்தைகளை பார்கும் 
ஆயாவானாள் அவ்வேழைத் தாய்!!!!
-லோசனி நாதன்-

என் ஓவியம்..!!

வாழ்கை தாளில் வரைந்த
ஓவியங்கள் எத்தனையோ..!!

அந்த ஆண்டவன் தந்த 
வர்ணங்களை
வடித்தெடுத்து
வரைந்த ஓவியங்கள் இன்னும்
எத்தணையோ..!!

அத்தனை ஓவியங்களும்
சுவரோவியங்களாய்
மாட்டிய போதும்கூட எல்லா
ஓவியங்களும் மெளனமாய்
எனனை பார்க...


ஏழு வண்ணங்களை 
உயிர் தூரிகை கொண்டு
ஒரு துளி கூட 
சிந்தாமல் சிதறாமல்
என் உயிரில் வரைந்து
என் உணர்வில்
உயிர்கொடுத்து -என் இதயத்தில்
காதலெனும் கண்ணாடி கொண்டு
மாட்டி வைத்து அழகுபார்கின்றேன்

என்னழகே 
உன் அழகை கண்கொட்டாது..!!!
-பிசாசு-

நினைப்பைத் தொலைத்து
உன் நினைவை மறக்க- நான்
நினைக்கும் பொழுதெல்லாம்

மறக்க மறந்தும்
உன்னை மட்டுமே
நினைத்தே
தொலைக்கிறேன் நான்..!!

தொலைவாய் போய்
தொலைந்த என்னை 
தேடி எடுத்தும்
தொலைத்துப்போனவளே..!!

நினைவாய் இருந்து என்னை
நித்தமும் கொள்பவளே..!!

தொலைந்து போ என்று நீ
சொல்லிப்போன போதும்
செத்துப்போனதடி 
என் இதயம்..!!

இனியொரு
முறையேனும்
உன்னை மறந்து -என்னை நீ
நினைப்பாயென்றால்

தான் மரணித்ததையும் 
மறந்து துடிக்குமடி என் இதயம்
உனக்காக..!!
-பிசாசு-

Thursday, September 1, 2016

புதிய தேசம்..!!!

நூற்றாண்டுகள் வாழும்
மலர்கள் மலர்ந்து வாசம் வீசும்
இயற்கை தேசம்..!!

இன்றே நட்டால் நாளை பயன்தரும் 
மரங்கள் வளர்ந்திடும் 
வியக்கும் தேசம்..!!

பட்டாடை உடுத்தி நிலவும் 
ஊர்வலம் போகும்
அழகிய தேசம்..!!

கால்கள் முளைத்து
நட்சத்திரங்கள் நடந்திடும்
வெளிச்ச தேசம்..!!

பனியாய் உறையும் சூரியன்
உதிக்கும் 
அக்கினி தேசம்..!!

எரிமலை குழம்பும்
அடுப்புக்கரியாய் பயன்படும்
உக்கர தேசம்..!!

கற்சிலைகளும் உயிர்க்கொண்டு 
உறவாடும்
அதிசய தேசம்..!!

வெயில் காலங்களிலும் வானவில் 
தோன்றிடும்
நிறங்களின் தேசம்..!!

மலைகளிலும் சிறு கடல்கள் 
அலைமோதும்
அற்புத தேசம்..!!

உப்பு நீர் கலக்காத கடல் 
இருக்கும்
தண்ணீர் தேசம்..!!

நீரின்றி சுவாசித்து
பறந்து திரியும் மீன்கள்
நீந்தும் 
வளி தேசம்..!!

பேசும் புறாக்களும் 
தூதுபோகாத
தூரதேசம்..!!!

பாடும் கழுதைகள் ராகம் 
இசைக்கும்
சங்கீத தேசம்..!!

குயில்களும் பஞ்சவர்ணத்தில்
பறந்து திரியும்
இனிமை தேசம்...!!

நல்ல சகுணங்களை சொல்லித்தரும் 
பூனைகள் வழிபோகும் 
நட்பு தேசம்..!!

பெண்களும் விந்துகொண்டு 
உயிர்கள் படைத்திடும்
பண்பு தேசம்..!!

ஆண்களும் கருவுற்று பிள்ளை 
பிரசவிக்கும்
கற்பு தேசம்..!! 

நல்ல மனிதம் போற்றி 
உதவிகரம் நீட்டும் மனிதன் வாழும்
நேய தேசம்..!!

எல்லை கோடிட்டு தொல்லையில்லா
மனிதன் வாழும்
பரந்த தேசம்..!!

அனாதை இல்லங்கள் 
முதியோர் இல்லங்கள்
அன்பு பெருகும் இல்லம் 
இந்த தேசம்..!!

இது சிவப்பு தேசம்
நான் கண் மூடி 
கனவில் கண்ட தேசம்..!!

என் தமிழ்தாயின் மடியில்
அவளின் தாலாட்டில் 
எழுதும் 
கவிதை தேசம்..!!

ஒரு வேளை இது உருவாகினாலும்
இல்லை கலைந்துப்போனாலும்
என்றும் இது 
புதிய தேசம்..!!!
-பிசாசு-


நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...