அடியே கருப்பாயி யென்றே
அந்த வாசட்படியேறும் போதே
அப்பாவின்
காரக்குரலில்
அம்மாவின்
அடுத்த
துக்கமும்
யுதமும்
தொடங்கிவிடும்
என்னப்பனோடு..!!!
கள்ளும்
சாராயமும் ஊறிப்போன
நாக்கிற்கு
அம்மாவின் சமையலின்
சாதரண உப்பும் காரமும்
பத்தவே
பத்தாதுபோகும்
செத்துப்போன
அன்புக்கும்..!!!
எப்படிச்
செய்தாலும்
என்னதான்
செய்தாலும்
ருசியில்லையென்று
காரணத்தோடு
அடித்து
சோற்றுக்கோப்பையையும்
லயத்து
கானில் வீசியெறியும் அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும்
அடிக்கத் தொடங்கிவிட்டார்
கழுத்தைபிடித்து
வெளியிலும் தள்ளிவிடுகின்றார்..!!!
பல நாட்களை பட்டினியாலே
கழித்திருக்கின்றாள்
வெற்றிலை
மட்டுமே அவள்
பசிபோக்குவதாய்
நினைத்திருக்கின்றாள்-
நானறிவேன்
என்னிரவுகளில்
காற்சட்டை
நனைந்ததை
விட -அவள் கண்ணீரில்
நனைந்ததே அதிகம்
என்பதை
நானறிவேன்..!!!
விறகெடுத்து
அடுப்பு மூட்டி
ஊதி ஊதி சாம்பளையும்
கரியையும்
பூசிக்கொண்டு சமைத்த- என்
தேவதையின்
அழகும்
அன்பும்
அவளருமையும்-என்
குடிகார
அப்பனுக்கு
தெரியவில்லை..!!!
பக்கத்து
வீட்டு
பையன்கள்
எல்லாம்
புது ஆடையோடு
பூரித்திருக்க
அழுக்காடையில்
எனைப் பார்த்து அழுதழுதே
ஏக்கம்
கொண்டவள்- தான் வைத்திருந்த
ஒரு தாலிமணியையும்
தாரைவார்த்துக்கொடுத்து
வாங்க சொன்னவள்
என்னழகை
ரசிக்க..!!!
அதிலும்
அரைவாசி குடிக்குப்போக
சந்தையில்
விற்ற சட்டையை
கடையில்
வாங்கியதாய் வாய் கூசாது
பொய் சொல்லி கொடுத்தவன்
என் அப்பன்..!!!
குடும்பத்தை
மட்டுமே
உலகமாய்
எண்ணியவளுக்கு
இது அன்று தெரியவில்லை..!!!
வீட்டிலும்
நொந்து போனவள்
தேயிலை
மலையிலும்
கொளுத்தும்
வெயிலிலும்
வெந்துபோனாள்..!!!
பத்தாம்
தேதி வந்தாள்
புன்னகையில்
பூப்பாள் பிள்ளைக்கு
கறிசோறு
போடலாமென்று..!!!
வேர்வை
சிந்தி வாங்கிய சம்பளத்தில்
ஒரு தொகையை
கட்டமொய்யாய்
மாதமொரு முறை
கொடுப்பாள்
“சந்தா
பணமென்று” சாக்கடை
நாய்களுக்கு..!!!
உரிமைகள்
பற்றி தெரியாதவளாய்
வாழ்ந்துவிட்டாள்
உறவுகளை
பற்றி
உணர்ந்தவள்-
அன்பான
உறவுகளின்றியே
வாழ்ந்துவிட்டாள்..!!!
இவள் கொண்ட
பொறுமையெல்லாம்
குடும்பத்தின்
பெருமை காக்க
அவள் பிள்ளை வாழ்வை
வளமாக்க என்பதை
நான் உணரும்
வயதில் அன்றில்லை
இன்று நான் உணரும்போது
அவள் உயிரோடில்லை..!!!
அன்பை தேடித் தேடியே
தேய்ந்து போனவள்..!!!
வெற்றிலை
சப்பி சப்பியே
சாபத்தை
வாங்கிக்கொண்டாள்
“புற்று
நோயாய்”
தாயில்லா
வலியை நான்
உணரும்
முன்பே
மனைவியில்லா
வலியை உணர்ந்துவிட்டான்- என்
குடிகார
அப்பன் குடியினால்
வந்த நோயால்
கவனிக்க
யாருமின்றி..!!!
ஏன் பிறந்தாள் அவள்
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில்
இவள் என்னப்பனுக்கு
வாக்கப்பட்டு..???
ஒருசான்
மஞ்சள் கயிறால்
வென்றானா
என் அப்பன்..???
அன்று தோற்றுப்போனவளும்
பிள்ளைக்காகவே
தோல்வியை
ஏற்றுக்கொண்டவளும்
என் அம்மா..!!!
-பிசாசு-